சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி சார்பில் போலி அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியாவது அக்கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னர், அது தொடர்பான நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் போன்று போலி இணையத்தளம் மட்டுமல்லாமல் சமூக ஊடகப் பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்ற போலி சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் ஆபாசப் படங்கள், அவதூறு செய்திகள் பதிவிடப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ‘லெட்டர் பேட்’ போல் உருவாக்கி, கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகிய இருவரது பெயரில் போலி அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
அண்மையில் விஜய் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக புஸ்ஸி ஆனந்த் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக குறிப்பிட்டு வெளியான போலி அறிக்கை விஜய்யின் தொண்டர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் போலி இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையின் உதவியை நாடுமாறு அவர் அறிவுறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.