சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில், திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ களமிறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை (ஏப்ரல் 6) வெளியிட்டார். 24 உரிமை முழக்கம் என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
மதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:- இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது.
மாநில சுயாட்சி செயல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்; ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்; திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்; புதிய கல்விக்கொள்கை ரத்து செய்யப்படும்; சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்; குடியுரிமை திருத்தச்சட்டம் ரத்து செய்யப்படும்; ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 500 என்றும், பெட்ரோல் ரூ. 75 என்றும், டீசல் ரூ. 65 என்றும் நிர்ணயிக்கப்படும்.
மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலையின்மையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்; கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற மேலும் சில அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.