கிருஷ்ணகிரி: மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்வதுடன், வாக்கு சேகரிப்புக்கு நூதன வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரான நரசிம்மன் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும், பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பரிசுப் பட்டியலில் கார், இருச்சக்கர வாகனம், ரொக்கத் தொகைகளும் அடங்கும்.
“ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தரும் மாவட்ட செயலாளர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும். இதே போல் எந்தெந்த வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அதன் முகவர்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்,” என்று நரசிம்மன் கூறினார்.
மேலும், வாக்குச்சாவடி முகவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகளையும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக பாஜக, கூட்டணிக் கட்சிகளின் களப்பணியாளர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

