அரியலூர்: பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது என்றும் தற்போது ஐந்தாவது பெரிய பொருளியலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும்போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பலர் பிணை பெற்று நடமாடி வருகின்றனர். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் பிணையில் உள்ளனர். “அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர்,” என்றார் ஜே.பி.நட்டா.
திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது என்றும் தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்கிறது என்றும் அவர் சாடினார்.
“தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி, கலாசாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது,” என்று ஜே.பி.நட்டா மேலும் கூறினார்.
இதற்கிடையே, திருச்சியில் பாஜகவினர் வாகன பேரணி நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறை பின்னர் மாற்றுப் பாதையில் பேரணி நடத்த அனுமதி அளித்தது.

