விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி காலி இடமாக அறிவிப்பு

1 mins read
4fc86085-05e4-478a-9d87-bf0ac5652e94
ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெள்ளிக்கிழமையன்று தேர்தல் பிரசார மேடையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 6) காலை மரணம் அடைந்தார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

புகழேந்தி மரணம் அடைந்த நிலையில் அது பற்றி மாவட்ட ஆட்சியர் தமிழக சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி சனிக்கிழமையன்று தகவல் தெரிவித்திருந்தார். அதை பெற்றுக்கொண்ட சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மரணமடைந்த காரணத்தால் அந்த தொகுதி காலியிடமாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அரசிதழிலும் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால் 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இப்போது நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதத்திற்குள் (மே) இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு அறிக்கை அனுப்பியவுடன் இது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

குறிப்புச் சொற்கள்