திருப்பூர்: கார் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் – சித்ரா தம்பதியினர் தங்களின் 60வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 8) திருக்கடையூர் சென்றுவிட்டு மீண்டும் திருப்பூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளகோவிலைக் கடந்து சென்றபோது, ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்களில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். உயிரிழந்தோரில் மூன்று மாதக் குழந்தையும் அடங்கும்.
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டுநர்கள் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.