புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 14% ஐபோன்கள் கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் மொத்த ஐபோன்களில் ஏழில் ஒன்று தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களின் மதிப்பு ரூ.1,16,521 கோடியாக உயர்ந்துள்ளதாக புளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த ஐபோன்களில் 67%சென்னை அருகே உள்ள ஆலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரிக்கிறது.
சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு ஐபோன் தயாரிப்பை மாற்றும் திட்டப்படி இந்தியாவில் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஐபோன் தயாரித்துவரும் தைவானைச் சேர்ந்த பெகட்ரான் தொழிற்சாலையை வாங்க டாடா குழுமம் பேச்சு நடத்துவதாக ராய்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பெகட்ரானுடன் இணைந்து புதிய ஆலையை ஒசூரில் டாடா குழுமம் அமைக்கும் நிலையில் சென்னை ஆலையை வாங்க டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.