மதுரை: போதைப்பொருள் கடத்தலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எத்தகைய விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்குத் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது நெருங்கிய நண்பர் என்று கருதப்படும் திரைப்பட இயக்குநர் அமீரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
அண்மையில் டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், புதன்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமீர், தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது உண்மைதான் என்றார்.
போதைப்பொருள் விவகாரத்தில் தொடக்கம் முதலே தாம் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று கூறி வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அத்துறையின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றார்.
“விசாரணை தொடர்பாக ஏதேனும் அழுத்தம் உள்ளதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இது குறித்து முழுமையாகப் பேச எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்,” என்றார் இயக்குநர் அமீர்.