சிதம்பரத்திலிருந்து கு. காமராஜ்
சிதம்பரம் என்றாலே நினைவுக்கு வருவது உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவிலும் பழைமை வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகமும்தான்
இந்தச் சிறப்புமிக்க நாடாளுமன்றத் தொகுதியில்தான் 1999 முதல் ஐந்து முறை போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது ஆறாவது முறையாக ‘இண்டியா’ கூட்டணி சார்பில் இங்கு அவர் தேர்தல் களம் காண்கிறார். பானைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.
கடந்த முறை பெருங்கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டதால் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது, ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமா குறிப்பிட்டுள்ளார்.
திருமாவுக்கு திமுக அரசாங்கம் கொண்டு வந்துள்ள, குறிப்பாக பெண்களுக்கான மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அவருக்கு கூடுதல் மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இண்டியா கூட்டணி ஆதரவால் ராகுல் காந்தியின் செல்வாக்கும் அவருக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை முதன்முதலில் ஒதுக்கப்பட்ட பானைச் சின்னம் பிரபலமடையாததால் அவருக்கு வாக்கு குறைந்தது என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அந்தப் பிரச்சினையும் இல்லை. திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றாலே மக்களுக்கு பானைச் சின்னம் நினைவுக்கு வருகிறது.
இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எம். சந்திரகாசன் பேட்டியிடுகிறார்.
அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட, குறிப்பாக மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலத் திட்டங்களை முன்வைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்தின் தேமுதிகவும் இவருக்கு வலுசேர்க்கிறது.
பாஜக வேட்பாளராக வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி களத்தில் இறக்கப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இந்தச் சிதம்பரம் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. இந்தக் கட்சி, தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதால் அதுவும் கார்த்தியாயினியின் வெற்றிக்குப் பலம் சேர்க்கிறது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெரம்பலூரைச் சேர்ந்த ஜான்சிராணி தமது கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கை நம்பி இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழ் முரசிடம் பேசிய மலர்விழி, 45, “திருமாவளவனுக்கு வெற்றி கிடைக்கும்,” என்று கூறினார்.
திரு கிருஷ்ணசாமி, 55, என்பவர், “ஆன்மிகத்தை ஆதரிக்கும் கட்சி வந்தால் நன்றாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
“அதிமுகவும் ஜெயலலிதா இருந்த காலத்தில் ஆன்மிகத்தைப் போற்றிய கட்சிதான். அதனால் அதிமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறது,” என்று கூறினார் திரு முத்து, 50.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் அத்தொகுதி மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் யார் என்பது ஜூன் 4ஆம் வாக்கு எண்ணிக்கை நாளன்று தெரிய வரும்.