நாமக்கல்: வாக்குக்குப் பணம் வாங்கமாட்டேன் என ஒவ்வொருவரும் முடிவு எடுத்தால் மாற்றம் விரைவில் உண்டாகும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
“என்னிடம் பணம் இல்லை. இருந்தாலும் நான் கொடுக்கமாட்டேன். மக்களுக்குச் சேவை செய்ய எதற்குப் பணம்?” என்று அவர் கேட்டார்.
நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து வியாழக்கிழமை சீமான் பேசினார்.
“சிலர் பணத்தை நம்பியும் பதவிக்காகவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இங்குள்ள அரசியல் கட்டமைப்பை மாற்றி, புரட்சியைப் படைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
“மக்கள் வரி கட்டுகிறார்கள். சாலை வரி கட்டிய பிறகும், சுங்க கட்டணம் ஏன் வசூலிக்கிறார்கள், சாலைகளைக் கூறுபோட்டு விற்றுவிட்டனர். இது நாடு இல்லை. அதானி, அம்பானிகளின் வீடு,” என்றார் அவர்.
“அமெரிக்காவில் உள்ள தனியார் முதலாளி தான் நீட் தேர்வை நடத்துகிறார். என் நாட்டு மாணவர்களுக்கான தகுதியை அமெரிக்க முதலாளி தான் தீர்மானிப்பாரா? 2019ல் திமுகஎம்பிக்கள் 39 பேர் நாடாளுமன்றத்துக்குப் போனார்கள். அவர்கள் அங்கு என்ன செய்தார்கள்?
“கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்றால் நாட்டில் நல்ல ஜனநாயகம் எப்படி மலரும்?” என்று சீமான் பேசினார்.