திருமங்கலம்: மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவேல். இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் கலந்துகொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் சென்று இருந்தார்.
திருவிழா முடிந்து ஊர்திரும்பியபோது புதன்கிழமை (ஏப்ரல் 10) காலை 6.30 மணிக்கு கார் விருதுநகர்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றது.
அப்போது, அருகில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் தவிர்க்க பிரேக் போட்டபோது கட்டுப்பாட்டை இழந்தது கார். சாலை ஓரம் இருந்த தடுப்புக் கம்பியில் மோதி கார் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டி, 55, காரில் பயணம் செய்த கனகவேல், 62, அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, 58, கனகவேலின் மருமகள் நாகஜோதி, 28, நாகஜோதியின் குழந்தைகள் சிவாஸ்ரீ, 8, சிவா ஆத்மிகா, 8, ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். ஐவர் காயமடைந்தனர். கள்ளிக்குடி காவல்துறையினர் விபத்து பற்றி விசாரிக்கின்றனர்.
உயிரிழந்தவர்களில் சிவாஸ்ரீயும் சிவா ஆத்மிகாவும் இரட்டைக் குழந்தைகள்.