கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது, 64. நாற்பதுக்கும் மேற்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதால் தேர்தல் மன்னன் என அப்பகுதி மக்கள் இவரை அழைக்கின்றனர்.
இவர் தற்போது கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலின் போது சவப்பெட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹெல்மெட் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு தனக்கு அரசியல் கட்சியினர் சிலர் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 13) மீண்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூர் முகமது வந்தார்.
தமக்கு அச்சுறுத்தல் நீடித்து வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறையும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். ஆனால் எந்தக் கட்சியினர் மிரட்டுகிறார்கள் என்பதை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.