கடலூர்: காட்டில் பாம்பை விடுவிப்பதற்காகச் சென்ற பாம்புபிடி வீரர், பாம்பு கடித்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி, 36.
கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை, தீயணைப்புத் துறை வீரர்களுடன் இணைந்து பாம்பு பிடிக்கும் தொண்டூழியப் பணியில் ஈடுபட்டு வந்தார். பாம்புகளைப் பிடித்து அவற்றை பத்திரமாக வனப்பகுதியில் விடுவிப்பது அவரது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) பண்ருட்டி முத்தையா நகரில் ஒரு வீட்டுக்குள் இருந்த நல்ல பாம்பு ஒன்றை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு தீயணைப்பு நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதனை வனப்பகுதியில் விடுவிக்க உமர் அலி வந்தார். தீயணைப்புத் துறையினர் ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருந்த பாம்பை அவர் வேறு ஒரு டப்பாவுக்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக சீறி எழுந்த பாம்பு உமர் அலியைக் கொத்தியது.
அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக உமர் அலியை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே உமர் அலி உயிரிழந்தார். பண்ருட்டி காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்துகின்றனர்.