கன்னியாகுமரி: அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பதாக அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சனிக்கிழமை (ஏப்ரல் 13) தேதி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சாலைப் பேரணியில் கலந்துகொண்டு பேசினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
“தமிழ் மொழி, பண்பாடு தமிழகத்தின் மரியாதையை நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கொண்டுசெல்ல பிரதமர் மோடி செயல்படுகிறார். தமிழில் பேசமுடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன்.
“அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றன. இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். அதிமுக திமுகவை ஓட ஓட விரட்டிவிட்டு பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் பேசினார்.