தூத்துக்குடி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறும் முன்பே திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றிபெற்றுவிட்டது போல் உணர்வதாகப் பேசியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்செந்தூரில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியபோது, “திருச்செந்தூர் மக்களைச் சந்தித்து திமுக வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு கோருவதற்காகவே இங்கு வந்தேன்.
“ஆனால், இங்கு வந்து பார்த்தபின்னர்தான் கனிமொழி ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.
“கனிமொழியை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்து 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றுவிட்டதைப்போல் உணர்கிறேன்,” என்றார் உதயநிதி ஸ்டாலின்.