சென்னை: நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் களத்திற்கு வர உள்ளார். “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி தொடங்கப்படும்,” என்று அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். இதற்கான வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்.
“மக்களுக்குப் போதுமான வசதிகள் இல்லாததால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி 100% வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற நல்ல செய்தியைக் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.
கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன்பின்னர்தான் கூட்டணி. அடுத்தகட்ட விஷயங்களை பிறகு பார்ப்போம்,” என்றார்.