சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி ரொக்கப் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பணத்தை கொண்டுசென்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் அது என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்தப் பணத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறையினர் அழைப்பாணை அனுப்பி இருந்தனர்.
தற்போது இந்த வழக்கில் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
பணம் கொண்டு சென்றவர்களிடம் இருந்து நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ அடையாள அட்டை நகல், பாஜக உறுப்பினர்கள் அடையாள அட்டைகளை தேர்தல் பறக்கும்படையினர் கைப்பற்றியுள்ளனர் என்றும் அந்த எப்ஃஐஆரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.