சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனைத் தகுதிநீக்கம் செய்யக் கோரித் தொடரப்பட்ட மனுமீது வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளரான ராகவன் என்பவர், “தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்மீது சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அவரைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி தமிழகத் தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இரு மனுக்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
“எனவே, இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு நயினார் நாகேந்திரன்மீது நடவடிக்கை எடுக்கவும் அவரைத் தகுதிநீக்கம் செய்யவும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடவேண்டும்,” எனக் குறிப்பிட்டு, மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டது.