சென்னை: மெரினா கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மணிமாறன், 25, கடந்த சனிக்கிழமை பிற்பகலில் கரைக்கு 200 மீட்டர் தொலைவில் மீன் கூட்டங்களைக் கண்டவுடன், கடலுக்குள் சென்று வலையை வீச முயன்றுள்ளார்.
அப்போது மணிமாறனின் இடது குதிகாலை சுறா கடித்தது.
இருப்பினும், அவர் தப்பித்து பாதுகாப்பாகக் கரைசேர்ந்தார். கரைக்குத் திரும்பியதும் அவரது நண்பர்கள் மணிமாறனை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு அருகே சுறா மீன்களைக் காண்பது மிக அரிது என்றும், கடலில் நீச்சலடிக்கும் பழக்கம் உடையவர் என்பதால் மணிமாறன் தப்பினார் என்றும் மீனவர்கள் நலன் ஆர்வலர் ஒருவர் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறிய அவர், பட்டினம்பாக்கம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஏறக்குறைய 20 சுறாக்கள் காணப்பட்டன. அவை அனைத்தும் இப்போது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.