திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், எஸ்டிபிஐ, வேட்பாளர் முகமது முபாரக், பாமக வேட்பாளர் திலக பாமா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் ஆகியோரிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்துவிட்டுச் சென்றபிறகு அவரது கட்சியினர் பிற கட்சிகளைப் போல் பிரசாரத்தைத் தொடராமல், உத்திகளை மாற்றி வீடு வீடாகச் சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து தங்கள் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். மற்ற கட்சியினரைப் போல் அல்லாமல், இவர்கள் மக்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அணுகுகின்றனர்.
வேலையில்லாத் திண்டாட்டம், பிற மாநிலத்தவர் வேலையைப் பறிக்கிறார்கள், ஆட்சியில் இருந்த கட்சிகள் மேல் உள்ள அதிருப்தி ஆகியவற்றைக் கூறி கிராமப்புற இளைஞர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக திருப்பியுள்ளனர்.
இவர்கள் பெரிய கூட்டத்தை எல்லாம் கூட்டிக்கொண்டு பிரசாரத்துக்குச் செல்லாமல், தங்கள் கிராமத்தில் உள்ள மக்களை வீடு வீடாகச்சென்று உரிமையுடன் உறவுகளைச் சொல்லி அழைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டுகின்றனர்.
“மது மயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் எங்கள் பக்கம் வருவதில்லை,” என்று நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.