சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் பிரபலங்கள், அவர்களின் மனைவியர், நடிகர் நடிகையர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் காலை முதல் வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை அளித்தனர்.
வாக்களித்த இந்த ஐந்து பேரிடமும் ஒரு ஒற்றுமை இருப்பதை கண்டுபிடித்த வலைத்தளவாசிகள் அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
“மேற்கண்ட ஐந்து பேரிடமும் ஒரு ஒற்றுமை உண்டு. 5 பேருமே சிகப்பு நிற சேலை அணிந்து வாக்களிக்க வந்திருந்தனர். சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து வந்து வாக்களித்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஒருவேளை பேசி வைத்துவிட்டு ஒரே சேலையில் வந்து வாக்களித்தார்களோ?” என வலைவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
துர்கா ஸ்டாலின்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வாக்காளர்களோடு வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.
துர்கா ஸ்டாலின் தனது கைவிரலில் உள்ள மையைக் காட்டியவாறு அங்கிருந்து மு.க.ஸ்டாலினுடன் புறப்பட்டுச் சென்றார்.
ராதா பழனிசாமி:
இதேபோல சேலம் சிலுவம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
அவருடன் அவரது மனைவி ராதா பழனிசாமி மகன், மருமகள் உள்ளிட்டோரும் நடந்து சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சிரித்த முகத்தோடு எடப்பாடி பழனிசாமியும் அவரது மனைவியும் வாக்களித்துவிட்டு வந்ததை புகைப்படக்காரர்கள் படம் பிடித்தனர்.
தமிழிசை சௌந்தரராஜன்:
இதேபோல தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளரும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
முதல் தலைமுறை வாக்காளர்கள் தயக்கமின்றி வாக்களிக்கவேண்டும் என தான் வாக்களித்த புகைப்படத்தோடு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
பிரேமலதா விஜயகாந்த்:
இதேபோல சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். விஜயகாந்த் இல்லாமல் அவர்கள் வாக்களிப்பது இது முதல்முறை.
சௌமியா அன்புமணி: தொடர்ந்து தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசியவர் தான் போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவித்தார்.