தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 20) காலை கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தேரோட்டம் சனிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூரில் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இத்தேர் சிதிலமடைந்ததால் தேரோட்டமும் நின்று போனது.
ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு புதிய தேர் செய்து கொடுத்ததன் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.