சென்னை: வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் வைப்பதால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளையும் சேர்த்து தொடர் விடுப்பாக எடுத்துக்கொண்டு வாக்காளர்கள் முறையாக வாக்களிக்க வருவதில்லை என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பதிவேட்டில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் கொத்துக் கொத்தாக நீக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ள அவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ”வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் தேர்தல் நடத்தினால் பிந்தைய, முந்தைய நாள்களையும் சேர்த்து தொடர் விடுப்பாக எடுத்துக்கொண்டு மக்கள் வாக்களிக்க வருவதில்லை.
“எனவே, தேர்தலை புதன், வியாழன் போன்ற நாள்களில் நடத்தும்படி தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசித்தபோது கூறியுள்ளோம். கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து 100% வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது,” என்றார் அவர்.