சென்னை: இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என்று தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி (படம்) வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை, அதிமுகவினர் மிகுந்த விழுப்புடன் இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
“அதிமுக வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும் மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணி சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் வாக்குச்சாவடி முகவர்களும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் ஒன்றுசேர்ந்து கண்காணிப்புக் குழுக்களை அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்து, வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவரும் இவ்வாறு அறிக்கை வெளியிடவில்லை.
தேர்தல் பிரசாரத்தின் போதும்கூட, வாக்கு எண்ணிக்கை மையங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அவர் தன் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், வாக்குப்பதிவின்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக பாஜகவை அடுத்து, அதிமுக தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.