மதுரை: ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
‘டிபன் பாக்ஸ்’ வெடிகுண்டு வீச்சில் சிக்கி நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.
முன்விரோதம் காரணமாக குண்டு வீசப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
காயமடைந்த நவீன்குமார் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியைச் சேர்ந்தவர். ஞாயிற்றுக்கிழமை காலை குண்டு வீசப்பட்டபோது நவீன்குமாருக்கு அருகே நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டதாகவும் ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
குண்டு வீசியது யார், அந்தக் குண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது, நவீன்குமாருக்கு யாருடன் முன்விரோதம் இருந்தது எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன என்றும் விசாரணை மேலும் தீவிரமடையும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த மறுநாளே குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.