திருப்பூர்: விவசாயியின் மகன் ஐஏஎஸ் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான முகிலன், ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறவில்லை.
எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இரண்டாவது முறை பங்கேற்றுத் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் இந்திய அளவில் அவருக்கு 404வது இடம் கிடைத்துள்ளது.
12ஆம் வகுப்பு வரை படித்த முகிலன், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘ஆட்டோமொபைல்’ பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு கண்டுவந்த முகிலன், தோல்வியைக்கடந்து இலக்கை நோக்கி தொடர்ந்து பயணம் மேற்கொண்டதாகச் சொல்கிறார்.
“மக்களுக்குச் சேவை செய்ய ஐஏஎஸ் பணி பெரும் துணை புரியும். அதனால்தான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. ஐஏஎஸ் தேர்வுக்கு சுயமுயற்சியில்தான் பயிற்சி மேற்கொண்டு சாதித்தேன்,” என்கிறார் முகிலன்.
இதனால் விவசாயியான தனது தந்தையும் தாயும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.