சென்னை: அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறிறயப்பட்டதை அடுத்து, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ ரீதியிலான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதாக தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த சில நாள்களாக கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் தொற்றுப் பாதிப்பு காரணமாக இறந்துவிட்டன.
பறவைக் காய்ச்சல் அண்டை மாநிலங்களில் பரவக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழகப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் இவை தீவிரமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தமிழக– கேரள எல்லையில் உள்ள எட்டு சோதனைச் சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவதாகவும் ஊடகத் தகவல்கள்
குறிப்பாக, கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் தமிழ்நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. கேரளாவை ஒட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி அருகே தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
“நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன,” என்று அதிகாரிகள் கூறியதாக தினகரன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்கு ஆறு கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
“வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளித்த பின்னரே, பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், உயிரி தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தப்படுவதால் பறவைக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை,” என அப்பகுதி பண்ணை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.