சென்னை: ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று ( ஏப்ரல் 22) காவல்துறை விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
அதற்குப் பதிலாக விசாரணைக்கு முன்னிலையாக தமது வழக்கறிஞர் மூலம் 10 நாள் அவகாசம் கேட்டுள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இது தொடர்பான விசாரணையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகமான ரொக்கம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உணவு விடுதி இருக்கும் கட்டடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.
இது தொடர்பான விசாரணையில் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல்துறை அழைப்பாணை அனுப்பியது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் காவல்துறை விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் முன்னிலையாகவில்லை.
விசாரணைக்கு முன்னிலையாக அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்.