சிவகங்கை: ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கிராம ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கடந்த 2015ஆம் ஆண்டு முருகன் (51வயது) என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
அப்போது ஐந்து, ஆறாம் வகுப்பு மாணவிகள் ஆறு பேருக்கு முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து மாணவிகளின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை ஆசிரியர் முருகனை கைது செய்ய உத்தரவிட்டார்.
முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவானது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.