சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகரமாக மாறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழக அரசை குற்றச்சாட்டியுள்ளனர்.
அண்மையில் கஞ்சா ஆதிக்கத்தில் நிகழ்ந்துள்ள சம்பவங்களை அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்.
“தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால் நாள்தோறும் குற்றச்செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள் காவல்துறையினரை தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியது, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரை தாக்கிய நபர் என கடந்த 3 நாட்களில் நடந்த சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், அண்மைய குற்றச் செயல்களைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போதை பொருள் நடமாட்டத்தை திமுக அரசு ஊக்குவிக்கிறதோ என்ற ஐயமும் எழுவதாகவும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதை பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
“கஞ்சா புழக்கம் குறித்து தமிழக அரசு மவுனம் காப்பது வருங்கால தலைமுறையினருக்கு பேரழிவை உண்டாக்கும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.