சென்னை: நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர், அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிக்கு ஆதரவளித்தார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அவருக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் தன்னிச்சையாகப் போட்டியிட்டார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைவதற்கான கடிதம் அளித்துள்ளார்.
தேர்தல் முடிந்த பிறகு கட்சியில் இணைவதற்கான கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மன்சூர் அலிகான், “பிரதமரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தபிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன்.
முதலில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தேன், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைய உள்ளேன்.
இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர்,” எனத் தெரிவித்தார்.