சென்னை: தங்கம், வெள்ளி விலை உயர்வால் காஞ்சிப் பட்டுச் சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 விழுக்காடு தங்கம், 40 விழுக்காடு வெள்ளி, 35.5 விழுக்காடு காப்பர், 24 விழுக்காடு பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.
தற்போது தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்வால் பட்டுச் சேலைகள் விலையை 30 விழுக்காடு வரை உற்பத்தியாளர்கள் உயர்த்தி உள்ளனர்.
காஞ்சிப் பட்டுச் சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பட்டுச் சேலைகளின் விலை அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டுச் சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டுச் சேலை வியாபாரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சிப் பட்டுச் சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.
தங்கம், வெள்ளி ஜரிகைகளைக் கோத்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிப் பட்டுச் சேலைகள் தனித்துவம் பெற்றவையாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சிப் பட்டுச் சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்குப் பட்டுச் சேலைகள் விற்பனையாகின்றன.