திருச்சி: திருச்சி முன்னாள் சார்-பதிவாளர் ஜானகிராமன் (79), அவரது மனைவி வசந்தி (65) ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியின் பல்வேறு பகுதிகளில் 1989 முதல் 1993 வரை சார்பதிவாளராக பணியாற்றியுள்ளார் ஜானகிராமன். ஜானகிராமன் பணியாற்றிய காலத்தில் தனது பெயரிலும் மனைவி வசந்தி பெயரிலும் ரூ.32.25 லட்சத்தில் சொத்து வாங்கியுள்ளார்.
மேலும் இருவர் பெயரிலும் வில்பட்டி, கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2001ஆம் ஆண்டு அப்போதைய திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு காவலர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை 20 ஆண்டுகளைத் தாண்டி நடந்து வந்தது.
இந்நிலையில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகி ராமன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதன்படி முதல் குற்றவாளியான முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன், இரண்டாவது குற்றவாளியான அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட ரூ.100 கோடி சொத்துகளை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.