ஈரோடு: கோயம்புத்தூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இதுவரை 14 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் அந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டத்தின் சத்திய மங்கல வட்டாரத்தைச் சேர்ந்த கடம்பூர் காட்டுப் பகுதிகளில் ரகசியக் கூட்டங்கள் நடத்தியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கடம்பூர் மலைப் பகுதியை அடுத்த சின்னசாலட்டி கிராமத்தில் வசிக்கும் ஆடு விற்பனைத் தரகர் குப்புசாமியிடம்(65) புலனாய்வுத் துறை அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை மீண்டும் குப்புசாமியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எத்தனை முறை மலைப்பகுதிக்கு வந்தனர், காட்டுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மீண்டும் அடுத்த வாரம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு, அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார்.
தீபாவளிக்கு முந்தைய தினத்தில் மக்கள் கூட்டத்தில் காரை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த ஜமேஷா முபினும், அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டிருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபினே உயிரிழந்தார்.
இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். ஜமேஷா முபினுடன் தொடர்புடைய 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வீடுகளில் சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.