திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதி அறிவிப்பதாக திருவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில், ஏப்.26 தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார். [Ϟ]தீர்ப்பு [Ϟ]நாளை முன்னிட்டு, நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலையாகினர்.
எனினும் நிர்மலா தேவி முன்னிலையாகவில்லை. வியாழக்கிழமை மாலை முதல் நிர்மலா தேவி தலைமறைவாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் இது உறுதி செய்யப்படாத நிலையில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.