சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் நடத்துநர் இருக்கை திடீர் என கழன்று விழுந்தது.
இதில் 54 வயதான பேருந்து நடத்துநர் முருகேசன் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததே இதற்கு காரணம் எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அனைத்து அரசுப் பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
பின்னர் ஆய்வு அறிக்கையை துறையின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் அரசுப் பேருந்துகளின் மேற்கூரையில் ஓட்டைகள் ஏற்பட்டு, மழைக்காலத்தின்போது அவற்றின் வழி நீர் ஒழுகும் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இத்தகைய நிலை நீடிக்கக்கூடாது என போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.