மதுரை: தமிழகத்தில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க மத்திய அரசு 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது மிகவும் குறைவான ஒதுக்கீடு என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வஞ்சனை செய்வதாக அவர் சாடியுள்ளார்.
“புயல், வெள்ள சேதங்களை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.38 ஆயிரம் கோடி கோரியுள்ள நிலையில், ரூ.275 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“இதன் மூலம் தமிழகத்தின் மீது பாஜகவுக்கு இருப்பது கோபமல்ல, தீராத வன்மம்,” என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு நிதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால், வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு, ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என மக்களவை பிரசாரத்தின்போது திமுக குற்றம்சாட்டி வந்தது.
கடந்த காலங்களில் தமிழகத்தில் பேரிடர் ஏற்பட்டபோதும்கூட மத்திய அரசு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்துக்கு உரிய நிதி வழங்காமல் கர்நாடக மாநிலத்துக்கு மிக அதிக தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழகக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.