சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
சென்னையில் தற்போது மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டம் குறித்து சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால், பங்குப்பகிர்வு மாதிரியின் கீழ் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் பொது முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முன்மொழிவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருப்பதாக தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிய உள்ள நிலையில் மத்திய அரசு இதுவரை நிதி ஒதுக்கவில்லை. எனவே, மாநில நிதியில் இருந்து தமிழக அரசு செலவீனங்களை மேற்கொண்டு வருவதாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.