சென்னை: எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக உள்ள ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. தற்போது பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6,855 மில்லியன் கன அடியாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே தேதியில் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 8,263 மில்லியன் கன அடியாக இருந்தது. ஒப்பீட்டளவில் இது கடந்த ஆண்டு நீர் இருப்பைவிட 1,408 மில்லியன் கன அடி குறைவாகும்.
இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், தற்போதுள்ள நீர் இருப்பைக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை குடிநீர் வழங்க இயலும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 210 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருவதாகவும், நடப்பு ஆண்டு நெம்மேலியில் புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள திட்டம் மூலம் நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.