சென்னை: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 28) ஏழு இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர், திருத்தணி, கரூர் பரமத்தி, சேலம் ஆகிய இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
கோடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊட்டி போன்ற மலைவாழிடங்களுக்கு மக்கள் செல்வது வழக்கம். ஆனால், அங்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஊட்டியில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.4 டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 73 ஆண்டுகளில் இதுவே அங்கு பதிவான ஆக அதிக வெப்பநிலை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் அதனால் வெப்ப அலை வீசும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ,சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள தமிழக அரசு, “வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக அளவு நீர் பருகவேண்டும்.
“சிறுநீரானது வெளிர்மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அவளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சூடான பானங்களைத் தவிர்க்கவேண்டும்.
“மோர், உப்பும் மோரும் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை நீர் பருகலாம்.
“வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்ல வேண்டும். தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவேண்டும். வெளியே செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
“வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
“திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணியில் துண்டு அணிந்து வேலை செய்யவேண்டும்.
“சூரிய ஒளி படும் வகையில் இருக்கும் சன்னல், கதவுகளை திரையிட்டு மூட வேண்டும்.
“கோடை வெயிலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யவேண்டும். மயக்கமுற்ற நபரை ஒரு பக்கமாக சாய்த்துப் படுக்கவைக்கவேண்டும். குறிப்பாக இடதுபுறம் படுக்க வைக்க வேண்டும்.
“நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு தமிழக அரசின் 104 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.