ஆவடி: ஆவடி அருகே சித்த மருத்துவர் ஒருவரையும் அவரது மனைவியையும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சந்தேகப் பேர்வழிகள் சிலர் கொன்றுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மகேஷ் என்பவரைக் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் நாயர், 62. சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே மருந்தகம் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னகுமாரி, 58. ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது இரு பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும் சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியரின் உடல்களை முத்தாப்புதுப்பேட்டை காவலர்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.