புதுடெல்லி: பெண் துணை ஆய்வாளருக்கு (எஸ்பி) பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2021ல் விழுப்புரத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த பெண் எஸ்பியை ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த 2023ல் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இத்தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இவ்வழக்கின் தொடர்பில் ராஜேஷ் தாஸைக் கைது செய்ய சிபிசிஐடி காவலர்கள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.