புதுடெல்லி: செந்தில் பாலாஜி பிணை மனு மீதான பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு தாமதம் ஆனதற்காக அமலாக்கத்துறை மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதிமுக ஆட்சியின்போது அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் பலருக்கும் வேலை வாங்கிக்கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வழக்கின் தொடர்பில், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஏறக்குறைய 10 மாதங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி தனக்கு பிணை வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியன தள்ளுபடி செய்தன.
இந்நிலையில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
செந்தில் பாலாஜியின் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், திங்கட்கிழமை அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து இருந்ததோடு, அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு மன்னிப்புக் கோரினார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி பிணை மனு மீதான விசாரணையை வரும் மே மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.