திருச்சி: லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்னும் சிற்றூரில் சாலையில் ஆதார் என்னும் அடையாள அட்டைகள் ஏராளமாய் கொட்டிக்கிடந்தன.
இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் பூவாளூரில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக கொட்டிக்கிடந்தன.
சாலையில் கிடந்த அடையாள அட்டைகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளூரைச் சேர்ந்ததாக உள்ளது.
இந்தச் செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் ஏற்கெனவே அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருந்த பொதுமக்கள் அங்கு வந்து தங்கள் முகவரி உள்ளதா என தேடிப் பார்த்து எடுத்துச் சென்றனர்.
இது குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.