தமிழ்நாடு: நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் நிலையில், காட்டுப்பகுதிகளிலிருந்து குரங்குகள் உணவையும் தண்ணீரையும் தேடி வருகின்றன.
காட்டுப்பகுதியில் பழ மரங்கள் இல்லாததால், குரங்குகள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் செல்லும் வாகனமோட்டிகள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டுப் பழகியதால், அவை காட்டுப்பகுதிக்குச் செல்லாமல் சாலையோரங்களிலேயே உணவுக்காகக் காத்திருக்கின்றன.
ஏற்கனவே வறட்சியால் காட்டுப்பகுதியில் உள்ள மரங்களும் செடிகளும் கருகியுள்ளன. இதனால் அங்குள்ள உயிரினங்கள் உணவின்றியும் தண்ணீரின்றியும் தவித்துவருகின்றன.
சாலைகளில் வீசப்படும் புட்டிகளில் உள்ள தண்ணீரையும், சாலையில் சிந்திக் கிடக்கும் தண்ணீரையும் குரங்குகள் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே யானை போன்ற பெரிய உயிரினங்களுக்குத் தண்ணீர்த் தொட்டிகளை அமைத்து தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வனத்துறை, குரங்குளின் தாகத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.