மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஒரு மணி நேர மின்தடையால், சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு கைப்பேசி வெளிச்சத்தில் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
மே 4ஆம் தேதியன்று மேட்டூர் அடுத்த செக்கானுர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (56) மற்றும் மனைவி வேளாங்கண்ணி (49) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கினர்.
விபத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்றவர்களை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பொதுமக்கள்.
அப்போது, மேட்டூரில் பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்ததால், மின்தடை ஏற்பட்டு மருத்துவமனையும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது.
மருத்துவமனையில் இருந்த அவசர உதவி மின் இயந்திரமும் வேலை செய்யாததால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் உயிருக்குப் போராடிய சில நோயாளிகளுக்கு செவிலியர்கள் கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர்.
இதனால் நோயாளிக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, மருத்துவ பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை. பின்னர், மின்விநியோகம் வந்த பிறகே மருத்துவர் சிகிச்சை அளிக்க வந்து முதலுதவி அளித்தார்.
ஏற்கெனவே மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை தர முடியாமல் அவதியுற்று வரும் அவர்களுக்கு மின்சாரத் தடையும் தலைவலி தருவதாகத் தெரிவித்தனர்.