தேனி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் பேரிஜம் ஏரியும் ஒன்று.
அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கான மின்சாரம் வனப்பகுதியில் இருந்து கம்பிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதி வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் தோனி மலை குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் மின்சாரக் கம்பியில், யானையின் உடல் பட்டு மின்சாரம் தாக்கியது.
இதில் நிலை தடுமாறிய யானை பெரிய பள்ளத்தில் விழுந்ததாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள மக்கள் பள்ளத்தில் யானை விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கூறியுள்ளனர்.
அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் வன அதிகாரிகள் யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
யானை எதனால் இறந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்கள் உடல் பரிசோதனையும் செய்தனர்.
மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானை இறந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.