கன்னியாகுமரி: கடலில் குளிக்கச் சென்ற மருத்துவ மாணவர்கள் நீரில் மூழ்கி ஐவர் உயிரிழந்தனர்.
தமிழகக் கடற்கரை பகுதிகளில் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடனும் கொந்தளிப்புடனும் காணப்படுகிறது.
இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ‘சிவப்பு எசசரிக்கை’ விடுக்கப்பட்டிருக்கிறது. கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்றுவரும் 12 மாணவர்கள், கன்னியாகுமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் சுற்றுலா சென்றனர். அவர்கள் குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள லெமூர் கடற்கரையில் குளித்து மகிழ்ந்தனர்.
அப்போது, அவர்களில் அறுவரை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுப்பயணிகள், தீயணைப்புத்துறைக்கும் கடலோரக் காவல்படைக்கும் தகவல் தந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. ஆயினும், பிரவீன் சாய், சாரு கவி, காயத்ரி, வெங்கடேஷ் ஆகிய நான்கு மாணவர்களையும் சடலமாகத்தான் மீட்க முடிந்தது.
மேலும் இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் சர்வதர்ஷித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று (மே 6) குளச்சல் கடற்பகுதியில் குளித்த இருவர் உயிரிழந்தனர். அதேபோல், தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த மூன்று பேர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு, கடலில் மூழ்கி மாண்டுபோயினர்.
கன்னியாகுமரி கடல்பகுதியில் இரண்டு நாள்களில் எட்டுப் பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தக் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என இந்திய கடல்சாா் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரி கடற்கரைப் பகுதிகளில் இயல்பைவிட 1.5 மீட்டர் அளவு அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.