சிறையில் தாக்குதல்; சவுக்கு சங்கர் காயங்களுடன் இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

சிறையில் தாக்குதல்; சவுக்கு சங்கர் காயங்களுடன் இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

2 mins read
b5b13fe1-4c90-4178-9594-afcef5d7ca45
சவுக்கு சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அவதூறு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சிறையில் காயங்களுடன் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தனது மனுவின் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் பிரிவின் சார்பில் மூன்று வழக்கறிஞர்கள், இரு மருத்துவர்கள் ஆகியோருடன் தாமும் நேரடியாக சிறைக்குச் சென்று சவுக்கு சங்கரை நேரில் சந்தித்ததாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

“திங்கள்கிழமை சந்தித்தபோது என்ன நிலையில் காணப்பட்டாரோ அப்படித்தான் இப்போதும் உள்ளார். காயங்களுக்காக கொடுக்கப்பட்ட வலி மாத்திரைகளை தற்போது திரவ வடிவில் கொடுத்து வருகின்றனர்,” என்றார் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.

சவுக்கு சங்கருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படுவதாக சிறை நிர்வாகம் சார்பில் மருத்துவ அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு அவ்வாறாக சிகிச்சை அளிக்கப்படவில்லை. தற்போது சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீதான வழக்கு விசாரணை புதன்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அச்சமயம் தன் மீதான தாக்குதல் குறித்து சங்கர் நீதிபதியிடம் புகார் தெரிவிக்க வாய்ப்பும் இருந்தது. அதை மனதிற்கொண்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

“சவுக்கு சங்கருக்கு ‘எக்ஸ்ரே’ எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் இரு நாள்கள் போராடியும் அதை எடுக்க முடியவில்லை.

“எனவே காவல்துறையின் அராஜகப்போக்கு, சிறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவது ஆகிய இரு அம்சங்களைத்தான் இவ்வழக்கில் முக்கியமான கூறுகளாக பார்க்க வேண்டும்,” என்றார் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்.

தமிழக முதல்வர் குடும்பம் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்