சென்னை: சென்னையில் இருந்து பார்த்தபோது அனைத்துலக விண்வெளி ஆய்வு மையம் தென்பட்டதாக பொதுமக்கள் பலர் தெரிவித்தனர்.
அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை பல நாடுகள் இணைந்து அமைத்துள்ளன.
பூமியைச் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இம்மையம் உதவிகரமாக உள்ளது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்த மையத்தில்தான் தங்குவர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.00 மணி அளவில் அனைத்துலக விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் காண முடியும் என அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமான நாசா அறிவித்திருந்தது.
சிறிய நட்சத்திரத்தைப் போன்று அம்மையம் காட்சி அளிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. உலகம் முழுவதும் ஏராளமானோர் விண்வெளி ஆய்வு மையத்தைக் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், சென்னையிலும் பலர் ஆய்வு மையத்தை வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடிந்தது என்று கூறியுள்ளனர்.

